திருமணத்திற்கு முன் எத்தனை மரியாதையாய் உன்னை "வாங்க போங்க" என்று அழைத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் மரியாதையைத் தாங்கிக் கொள்ள முடியாதவனைப் போல "இடை இடையே வாடா போடா என்றும் பேசுடி" என்றாய்.
ஆரம்பத்தில் உன்னை "வாடா போடா" என்று பேச நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.
இப்பொழுது நித்தமும் உன்னை "வாடா போடா" என்று உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் என்னிடம் "நான் உன் புருஷன் டி.. இடை இடையே கொஞ்சம் மரியாதையும் கொடுத்து பேசுடி" என்று பாவமாய் கேட்கிறாய்.
"என்னை மன்னித்துவிடு. உன்னை வாடா போடா என்று பேசும் பொழுதுதான் நமக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிப்பதாக உணர்கிறேன். இப்பொழுது சொல். உன்னை நான் எப்படி அழைப்பது?" என்றேன்.
என்னை இழுத்து அணைத்துக் கொண்டாய்.
"அய்யோ விடுடா" என்றேன்.
"ஒஹோ.. இதுதான் அந்த நெருக்கமா?" என்று புன்னகைத்தாய்.
வெட்கத்தில் தலை குனிந்தேன்.